'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்'!: பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..!!

சென்னை: பொது இடங்களில் மக்கள் நீராவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் 88 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரே இடத்தில் பலர் ஆவி பிடிப்பதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டார்.  எனவே பொது இடங்களில் மக்கள் நீராவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வருகிற புகைபோடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அழுத்தமான காற்று புகைபோடுதல் என்ற ஒன்று தற்போது பொதுமக்கள் இடையே பரவி வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 

வாயை திறந்து புகையை பிடிக்கும் போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார். எனவே நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டு வைத்தியம் செய்வதை தவிர்த்து மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: