கால்களில் பேண்டேஜால் ஒட்டி நூதன முறையில் துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1.8 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சோ்ந்த முகமது அஸ்ரப் (21) என்பவர், ‘என்னிடம் சுங்கவரி செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை’ என்று கூறினார். அதோடு வேகமாக கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார்.

அவர் மீது சுங்க துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து வந்து, அவரது உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராததால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். அவரது இரு கால்களிலும் பெரிய பேண்டேஜ் துணி ஒட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தில் அதை பிரித்து பார்த்தனர். தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 1.8 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.89.17 லட்சம். இதையடுத்து முகமது அஸ்ரபிடம் விசாரணை நடத்தினர். அப்போது தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது இப்ராகிம் (39) என்பவருக்காகதான் இந்த தங்கத்தை கடத்தி வருவதாகவும்,

அவர் தற்போது விமான நிலையத்திற்கு வெளியே நிற்பதாகவும் கூறினார். இதையடுத்து அவரையும் சுங்கத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான இருவரிடமும் சுங்கத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: