முழு ஊரடங்கால் வெறிச்சோடிய நீலகிரி மாவட்டம்

ஊட்டி : தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தொற்று கட்டுக்குள் வராத நிலையில் கடந்த 10ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை இரு வார கால முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, இறைச்சி, பல சரக்கு கடைகள் தவிர பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஊரடங்கு அமலில் இருப்பதை பொருட்படுத்தாமல் மக்கள் அலட்சியமாக சுற்றி திரிவது தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை 10 மணியுடன் மூட வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது.

மேலும் ஏற்கனவே, அறிவித்தபடி ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில், ஞாயிற்றுகிழமையான நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதற்கு நீலகிரி மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு முதலே கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 தாலுகாவிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஊட்டி நகரில் என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளத்தில் இயங்கும் தற்காலிக உழவர் சந்தை, ஏடிசி., மைதானத்தில் இயங்கும் நகராட்சி காய்கறி கடைகள், மார்கெட் வளாகத்தில் உள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.

இதனால், ஊட்டி நகரில் மயான அமைதி நிலவியது. ஊட்டி எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, மார்க்கெட் சாலை, லோயர் பஜார் சாலை, கலெக்டர் அலுவலக சாலைகள் முற்றிலும் வாகனங்கள் இன்றி காலியாக இருந்தன. ஊட்டி புறநகரில் ஊட்டி - கூடலூர் சாலை, ஊட்டி - மஞ்சூர் சாலை, ஊட்டி - கோத்தகிரி சாலை உள்ளிட்டவைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஓரிரு மருந்தகங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஞாயிறு ஊரடங்கை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக தடுப்புகள் அமைத்து சுமார் 600க்கும் போலீசார்  வழக்கம் போல் ரோந்து பணிகள் மேற்கொண்டனர். அதற்கேற்றார் போல் மழை மற்றும் பனிமூட்டமான காலநிலை நிலவியதால் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. நகருக்குள் உலா வந்த ஓரிரு வாகனங்களை நிறுத்தி விசாரித்து வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: