கொரோனாவுக்கு இலக்காகும் சிறார்கள்!: தமிழகத்தில் 10 நாட்களில் 10,669 பேருக்கு தொற்று உறுதி..பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தினசரி தொற்றின் காரணமாக 4வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மராட்டியத்திற்கு அடுத்ததாக 2ம் இடத்திற்கு சென்றுவிட்டது. கொரோனா 2ம் அலையில் சிக்கியவருக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் - முது வயது முதிர்ந்தவர்கள் வரை ஆக்சிஜன் படுக்கைகளை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,264 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,669 சிறார்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மிக எளிதாக குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவி விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது கண்டறியப்படும் நோய் தொற்றுகளில் சுமார் 40 விழுக்காடு அளவுக்கு பிளஸ்டக் எனப்படும் குடும்ப தொற்று மூலமாகவே ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே மக்கள் பொதுவெளிகளை போலவே வீடுகளிலும் விழிப்புடன் செயல்பட்டு கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Related Stories: