சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்

சென்னை: பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘செம்மர கடத்தல் ஜம்பவான்’ என அவதூறு பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு  தலைவர் அஸ்லாம் பாஷா புகார் ஒன்று அளித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ”ரமலான் பண்டிகைக்கு எனது நண்பர்கள் பலர் நேரிலும் மற்றும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த வகையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த  விநாயகம் என்பவர் தனக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த வாழ்த்து பதிவில் ‘செம்மர கடத்தல் ஜம்பவான் தமிழ்நாடு சிறுபான்மை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஸ்லாம் பாஷா அவர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் வகையில் சமூக  வலைத்தளத்தில் இதுபோன்ற பதிவை விநாயகம் என்பவர் பதிவு செய்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சமூக வலைத்தளத்தில் இருந்து அவதூறு பதிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: