சென்னையில் உள்ள 400 சிறப்பு காய்ச்சல் முகாம்களில் கொரோனா அறிகுறி தெரிந்த 18,46,773 பேருக்கு பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 400  சிறப்பு காய்ச்சல் முகாம்களில் 18,46,773 பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள்  இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக கடந்த 8ம் தேதி முதல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ  முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி  சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரு வார்டிற்கு இரண்டு காய்ச்சல் முகாம்கள் என 400  சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8ம் தேதி முதல் இதுநாள் வரை 1,29,324 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  65,92,859 நபர்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களில் 18,46,773 நபர்களுக்கு கொரோனா வைரஸ்  தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் முகாம்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகம் உள்ள இடங்கள் மற்றும் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களாக கருதப்படுகின்ற பகுதிகளில் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இந்த காய்ச்சல் முகாமில்  மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி அளவிலான கள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இந்த காய்ச்சல் முகாம்களை கண்காணித்து வருகின்றனர்.

 எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுபடுத்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: