கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி குழு: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சிகள் அடங்கிய குழு அமைக்கக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 13ம் தேதி  தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை  வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு  அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த  தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களிடம் பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில், 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, திமுக- மருத்துவர் நா.எழிலன், அதிமுக- மருத்துவர் சி.விஜயபாஸ்கர், இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.எம்.முனிரத்தினம், பாமக- ஜி.கே. மணி, பாஜ- நயினார் நாகேந்திரன்,

மதிமுக- மருத்துவர் சதன் திருமலைக்குமார், விசிக -  எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ராமசந்திரன், மனித நேய மக்கள் கட்சி- ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி- ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை  கட்சி- வேல்முருகன், புரட்சி பாரதம்- பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் இந்த ஆலோசனை குழுவில் உள்ளனர். மேலும், இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும்.  இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர்  செயலராக செயல்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: