மும்பையில் இருந்து விமானத்தில் 1.2 லட்சம் கோவாக்சின் சென்னை வந்தது

சென்னை: மும்பையிலிருந்து மேலும் 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் 2ம் அலையை கட்டுப்படுத்த, மக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை தமிழகத்துக்கு  ஒதுக்காததால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள மத்திய மருந்துதொகுப்பு  கிடங்கிலிருந்து 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை நேற்று தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது.

அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை விமான நிலையம்  வந்தது. 10 பார்சல்களில்  வந்த 290 கிலோ எடையுடைய அந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனர். அதன்பின்பு குளிர்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில  பகுதிகளுக்கு இன்று பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் வருகை

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு இந்திய விமானப்படை விமானத்தில் 20 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. அவற்றை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம்  விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதேபோல், திரவ ஆக்சிஜன் ஏற்றி வருவதற்காக 2 டேங்கர் லாரிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இந்திய விமான படை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: