கொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்!: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..!!

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக ஆவி பிடிக்கும் இயந்திரங்கள் சென்னை சென்ட்ரல் இருப்பு பாதை காவல் நிலையம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. ரயில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க மூலிகையுடன் கலந்த ஆவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் கூடவே கபசூர குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெட்ரோல் பங்குகளில் மூலிகை ஆவி பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சங்ககிரி ரோட்டில் உள்ள திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பெட்ரோல் பங்கில், சுவாசத்தை சுத்தமாக்கவும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய குக்கரில் ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி, துளசி, வேம்பு, கிராம்பு, மிளகு, மஞ்சள், எலுமிச்சை, உப்பு, இஞ்சி, வெற்றிலை உள்ளிட்ட 12 மூலிகை பொருட்களை போட்டு கொதிக்க வைத்து, இதில் உருவாகும் ஆவியை குழாய்களில் கொண்டு வந்து, 4 இடங்களில் ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலம் முடியும் வரை இம்முறை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், சென்னையில் மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெகு விரைவில் நீராவி பிடிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். மணலி மண்டலத்தில் மருத்துவ சிகிச்சை முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு செய்தனர். அப்போது மக்களுக்கு எவ்விதத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். 

Related Stories: