எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை கூட மத்திய அரசு போட தவறிவிட்டது!: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

டெல்லி: 4 கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை கூட  மத்திய அரசு போட தவறிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு இந்திய கம்பெனிகளுக்கும் தடுப்பூசி தயாரித்து தர மத்திய அரசு கடந்த ஜனவரி 11ம் தேதி ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறியுள்ள ப.சிதம்பரம், இரு நிறுவனங்களும் மானியமோ, முதலீடோ, கடனோ அரசிடம் இருந்து எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் தடுப்பூசி சப்ளைக்கு முன்பணம் மட்டும் கொடுத்த மத்திய அரசு, உற்பத்தியை பெருக்குவதற்கு எந்த ஊக்கமும் தர தவறியதாக அவர் குற்றசாட்டியுள்ளார். இரு நிறுவனங்களும் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்று கணிக்க தவறிய மத்திய அரசு, 4 கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கையும் போட தவறியதாக ப.சிதம்பரம் சாடியுள்ளார். 

முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய அரசு தடை விதிக்க தவறியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த மார்ச் 29ம் தேதி தான் தடை செய்யப்பட்டதாகவும் அதற்குள் 5 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 3வது தடுப்பூசியான ஸ்புட்னிக்கிற்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி தான் அனுமதி தரப்பட்டுள்ளதாக கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர், வேறு எந்த தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை. இறக்குமதியும் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார். 

Related Stories: