×

பெட்ரோல் 21, டீசல் 26 காசு அதிகரிப்பு....ரூ. 95ஐ நெருங்கும் பெட்ரோல் விலை : தொடர் உயர்வால் மக்கள் அதிருப்தி

சேலம்:நாடு முழுவதும் இன்று பெட்ரோல் விலை 21 காசும், டீசல் விலை 26 காசும் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவிய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண் ணெய் விலை பெருமளவு சரிந்து ஒரு பீப்பாய் 25 டாலருக்கு கீழ் வந்தது.

அந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்திக்கொண்டன. கடந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பின் கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியதும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கினர். இதனால் ₹10க்கு மேல் உயர்ந்துவிட்டது. 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கி யுள்ளனர். அதிலும், நடப்பு மாதம் 15 நாளில் பெட்ரோல் லிட்டருக்கு ₹1.66ம், டீசல் லிட்டருக்கு ₹2.06ம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்றும் பெட்ரோல் 21 காசும், டீசல் 26 காசும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹94.01ல் இருந்து 21 காசு உயர்ந்து ₹94.22க்கும், டீசல் ₹87.81ல் இருந்து 26 காசு உயர்ந்து ₹88.07க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே, சேலத்தில் பெட்ரோல் ₹94.52ல் இருந்து 21காசு அதிகரித்து ₹94.73க்கும், டீசல் ₹88.51ல் இருந்து 26 காசு அதிகரித்து ₹88.51க்கும் விற்பனையாகிறது. கொரோனா நோய் தொற்று பரவல், ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் இவ்வேளையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Tags : பெட்ரோல்
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...