புதுடெல்லி: குஜராத் போன்ற சில மாநிலங்களில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாகவும், இது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமெனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் சக்திசின் கோஹில் ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: குஜராத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் வரை 1 லட்சத்து 23 ஆயிரம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 58,000 இறப்பு சான்றிதழ்கள் தரப்பட்டுள்ளன. இத்தகவலை நாங்கள் அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் இருந்து முழுமையாக ஆய்வு செய்து திரட்டியுள்ளோம்.இதே காலகட்டத்தில் 4,218 பேர் கொரோனாவில் இறந்துள்ளதாக குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது. முந்தைய ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் உள்ள இறப்பு எண்ணிக்கை 65,805 ஆகும். இதில் 4,218 பேர் மட்டுமே கொரோனாவில் இறந்ததாக கூறி உள்ளனர். எனவே இதை ஆண்டின் வழக்கமான இறப்பு உயர்வு என்றோ, வேறு காரணங்கள் என்றோ கூறி விட முடியாது.