சென்னை: தமிழக கூட்டுறவுத் துறையில் பொது வினியோக திட்டப் பிரிவில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் வசந்தி. இவர், 2015- 17ம் ஆண்டுகளில் மதுரையில் களப் பணியாளராக பணியாற்றிய போது, குலமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு நடத்தவில்லை எனக் கூறி அவரது ஊதிய உயர்வை நிறுத்தி துணை பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து வசந்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், சில கூட்டுறவு சங்கங்களை அவருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கியதால் குலமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்ய முடியவில்லை. பதவி உயர்வு நெருங்கிய நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.