திருச்சி: கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2,000 ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைவருமே நிச்சயம் தேர்வு நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். இன்றைய நிலையில் தேர்வு என்பது அவசியம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த நோய் தாக்கத்தின் விளைவு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதில் உறுதியாக இருக்கிறோம்.