பொய் பாலியல் புகார்; தங்கராணி சொப்னா மீண்டும் கைது: காணொளி மூலம் ஆஜர்படுத்தினர்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அமீரக தூதரகத்துக்கு பணிக்கு வருவதற்கு முன்பு ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்தார். இந்நிலையில் ஷிபுவுக்கு எதிராக சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக அங்கு பணிபுரியும் மற்ற பல இளம்பெண்கள் சாட்சி கையெழுத்தும் போட்டிருந்தனர். இதுகுறித்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அது பொய் புகார் எனவும், இதன் பின்னணியில் சொப்னா செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சொப்னா மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் சொப்னா அடைக்கப்பட்டுள்ள திருவனந்தபுரம் சிறைக்கு நேற்று சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து காணொளி மூலம் திருவனந்தபுரம் குற்றவியல் முதல்வகுப்பு மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தினர். மேலும், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து வரும் 22ம் தேதி வரை ெசாப்னாவை காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

Related Stories: