நேபாள பிரதமராக ஒலி மீண்டும் பதவியேற்பு

காத்மண்ட்:  நேபாளத்தில் எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிய நிலையில் அந்நாட்டு பிரதமராக மீ்ணடும் சர்மா ஒலி நேற்று மீண்டும் பதவியேற்றார். நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் சர்மா ஒலிக்கு ஆதரவாக 93 எம்பிக்கள் வாக்களித்தனர். பிரதமருக்கு எதிராக 124 எம்பிக்கள் வாக்களித்தனர். இதன்காரணமாக அவர்  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார்.

இதனை தொடர்ந்து புதிய அரசை அமைப்பதற்கு எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை அதிபர் வித்யாதேவி பண்டாரி காலஅவகாசம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் ஆட்சி அமைப்பதற்கு எதிர்கட்சிகள் தவறிவிட்டதால் பிரதமராக மீண்டும் சர்மா ஒலியை அதிபர் நியமித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று சர்மா ஒலி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் வித்யாதேவி பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற 30 நாட்களுக்குள் சர்மா  ஒலி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம்.

Related Stories: