லண்டன்: கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்துதான் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் வவ்வாலிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக சீனா கூறியது. அதே சமயம் சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நேரில் ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்ததற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம் என பொத்தாம் பொதுவாக அறிக்கை தந்தது.
இந்நிலையில், சைன்ஸ் என்ற இதழில் வெளியான கட்டுரையில், கொரோனா வைரஸ் உதயமான விதம் குறித்து இன்னும் அதிகமான ஆய்வு தேவை என இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த முன்னணி ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்திய வம்சாவளியான கேம்பிரிட்ஜ் பல்கலை வைராலஜிஸ்ட் ரவீந்திர குப்தாவும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சீன ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற கூற்றை ஒதுக்கி விட முடியாது என கூறியுள்ள அவர்கள் இந்த விவகாரம் குறித்து அதிகமான ஆய்வு தொடர வேண்டியது அவசியம் என கூறி உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் எதிர்கால உருமாற்றங்களை அறிந்து அவற்றை கட்டுப்படுத்த அதன் உருவான விதம் தெரிய வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.