பெங்களூரு: பெங்களூருவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகள் மிகவும் மந்த நிலையில் இருக்கிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது என்பது போன்ற பொய் தோற்றத்தை பாஜ அரசு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்காக ஏற்கனவே ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உதவி மையம் செயல்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்காகவும் வைரஸ் தொற்று தடுப்பு மருந்து கொள்முதல் செய்வதற்காகவும் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்., எம்எல்சிக்களின் தொகுதி நல நிதியில்இருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இத்துடன் காங்கிரஸ் கட்சியின் நிதியும் சேர்த்து ரூ.100 கோடி மாநில அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். முதல்வர் எடியூரப்பாவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி தெரிவித்துள்ளோம். அரசு அனுமதி அளித்த உடனே ரூ.100 கோடி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.