×

கோவைக்கு புதிய போலீஸ் கமிஷனர்; 5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழக போலீஸ் அதிகாரிகள் 5 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் கோவைக்கு புதிய கமிஷனரும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை போலீஸ் கமிஷனர் டி.எஸ்.அன்பு, தென் மண்டல ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐஜியாக உள்ள தீபக் எம்.தாமோர், கோவை நகர போலீஸ் கமிஷனராகவும், சென்னை மத்தியக் குற்றப்பரிவு கூடுதல்  கமிஷனர் வித்யா, ஜெயந்த் குல்கர்னி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாகவும், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு பிரிவு ஐஜியாகவும், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, லஞ்ச  ஒழிப்புத்துறை டிஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த ராதிகா மாற்றப்பட்டுள்ளார். மேலும், தற்போது கோவை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள தீபக் எம்.தாமோர், ஏற்கனவே கோவை நகர போலீஸ் கமிஷனராக இருந்தவர். அப்போது அமைச்சராக இருந்த வேலுமணிக்கு வேண்டிய ஒரு இன்ஸ்பெக்டரை மாற்றம்  செய்ய தீபக் எம்.தாமோர் முடிவு செய்தார். ஆனால் அவரை மாற்றக்கூடாது என்று கூறிய வேலுமணி, மேலும் சில போலீசாருக்கு மாறுதல் வேண்டும் என்று கூறினார்.

இதை கேட்காத போலீஸ் கமிஷனர், மாறுதல் உத்தரவுகளை பிறப்பித்தார்.  இதனால் இன்ஸ்பெக்டர் உத்தரவுகளை பிறப்பித்த 24 மணி நேரத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு, திருச்சி ஆயுதப்படை ஐஜியாக தூக்கியடிக்கப்பட்டார். அதன்பின்னர் நெல்லை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார். தேர்தல்  நெருங்கியதும், அங்கிருந்தும் மாற்றப்பட்டார். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் அவரை மத்திய மண்டல ஐஜியாக நியமித்தது. தற்போது அவர் மீண்டும் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் கோவை நகர போலீஸ்  கமிஷனராக நியமிக்கப்பட்டது, போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Coimbatore , New police commissioner for Coimbatore; 5 Police Officers Action Transfer
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...