திருவள்ளூர்: தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் ஏற்றிவருவதற்காக 5 டேங்கர் லாரிகள் ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால் அவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைகளும் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிற மாநிலங்களின் உதவியையும் நாடியுள்ளார். இந்த நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து விரைவு ரயில்கள் மூலம் டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.