கங்கை நதிக்கரையில் சடலங்கள் மிதந்த விவகாரம் : பீகார், உத்தரப்பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

உன்னாவ்: பீகார், உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையில் சடலங்கள் மிதந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் தினமும் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், நாடு முழுவதும் மயானங்களில் சடலங்களை எரியூட்ட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மயானத்தின் வாசலில் மணிக்கணக்கில் சடலங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய, பீகாரின் பக்சர் மாவட்டத்திலும், உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்திலும் கங்கை நதிக் கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனாவால் இறந்தவர்கள் சடலங்களை எரிக்க இடமில்லாமல் அவர்களது உறவினர்களே கங்கையில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், கொரோனா பலியை மறைக்க உபி அரசு இவ்வாறு சடலங்களை கங்கையில் வீசியிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.  பீகார் அதிகாரிகளும், உபியில் இருந்து இவ்வாறு சடலங்கள் கங்கையில் வீசப்பட்டிருப்பதாக புகார் கூறி உள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் புக்சர் மற்றும் ரவுதாபூர் ஆகிய கிராமங்களில் கங்கை கரையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளன. கடந்த மாதம் மட்டும் கங்கை கரை மணற்பரப்பில் 300 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கங்கையில் சடலங்கள் மிதந்தது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம், உத்தரப்பிரதேச மற்றும் பீகார் மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கங்கையில் சடலங்கள் வீசுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதன் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. 

Related Stories: