பெட்ரோல் 26, டீசல் 32 காசு அதிகரிப்பு : விலை ₹95ஐ நெருங்குவதால் மக்கள் கடும் பாதிப்பு

சேலம:நாடு முழுவதும் இன்று பெட்ரோல் 26, டீசல் 32 காசு அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.  நாடு முழுவதும் இன்று, பெட்ரோல் 26 காசும், டீசல் 32 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 5 நாட்கள் விலையை அதிகரித்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.84ல் இருந்து 26 காசு உயர்ந்து ₹94.01க்கும், டீசல் ₹87.49ல் இருந்து 32 காசு உயர்ந்து ₹87.81க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலத்தில் பெட்ரோல் 26 காசு அதிகரித்து ₹94.52க்கும், டீசல் ₹87.93ல் இருந்து 32 காசு அதிகரித்து ₹88.25க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் தினமும் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளால் வேலையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு, இவ்விலையேற்றம் மேலும் பாதிப்பை தந்துள்ளது.

Related Stories: