மதுரை: மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவமனை லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்தனர். கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ₹1,600க்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் முறைகேடாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை செல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கிடைத்த ஒரு செல்போன் எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் பேசியவர், மதுரை பைபாஸ் ரோட்டில் பாத்திமா கல்லூரி அருகே வந்தால், ஒரு பாட்டில் மருந்து ₹28 ஆயிரத்திற்கு வழங்குவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் மப்டியில் அங்கு சென்றனர். அங்கு நின்றிருந்த 2 பேர், மருந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். புரோக்கர் போல செயல்பட்ட மற்றொருவர் தப்பிவிட்டார்.