புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தீவிரமாக உள்ளதால் நாடு முழுவதும் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துபொருட்களுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை. மிஞ்சி இருப்பது மத்திய விஸ்டா திட்டம் மற்றும் மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி மற்றும் இங்கேயும் அங்கேயும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் மட்டும் தான், ”என பதிவிட்டுள்ளார்.பிரதமர் மோடி தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதுதொடர்பான தகவல்கள் ஊடகங்களில் அடிக்கடி காட்டப்படும் நிலையில், கொரோனா தீவிரமாகி நாடே அல்லல்படும் இந்த சமயத்தில் பிரதமர் மோடி பற்றி பெரிய அளவில் தகவல்கள் வெளிய வராததையே ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.