அரசின் சிகிச்சை நடவடிக்கை திருப்தி அளிக்கிறது மருத்துவர் கண்காணிப்பில் வராண்டாக்களில் ஸ்ட்ரெச்சரில் வைத்து சிகிச்சை தரலாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை: உயிரிழப்புகளை தடுக்க மருத்துவமனை வராண்டாக்களில் ஸ்ட்ரெச்சரில் வைத்து சிகிச்சை தரலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் ரெம்டெசிவிர் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் நவீன் மூர்த்தி ஆஜராகி, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 30 முதல் 45 வயதினர் அதிகம் மரணம் அடைந்துள்ளனர் என்றார். இதையடுத்து, மற்றொரு வக்கீல் செந்தில்குமார்,  மூடப்பட்ட  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதைக்கேட்ட தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை.  பிற மருத்துவமனைகளிலிருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலர் மரணம் அடைந்துள்ளனர் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து சிகிச்சை அளிப்பது மருத்துவமனைக்கு ஈடாகாது. ஆம்புலன்சில் வெளியில் காத்திருப்பதற்கு பதிலாக மருத்துவர் கண்காணிப்பில் மருத்துவமனை வளாகத்தில் இருப்பது போல ஸ்ட்ரெச்சரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கான கூடுதல் ஸ்ட்ரெச்சர்களை ஏற்படுத்த வேண்டும். போர்க்கால நிலை போல கருதி, கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்ஸ்களில்  நிறுத்தி வைக்காமல் மருத்துவமனை வராண்டாக்களில் ஸ்ட்ரெச்சர்களில் வைத்து சிகிச்சை அளிக்கலாம்.தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அடிப்படையில் உயர்வாக இருந்தாலும், சதவீதத்தில் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.

ஆனால் புதுச்சேரியில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். புதுச்சேரியில் 3800 படுக்கைகள் மட்டுமே உள்ளது போதுமானதல்ல என்றும் எச்சரித்துள்ளனர். மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தலாம்.பாலக்காட்டில் இருந்து வரக்கூடிய 40 டன் அக்சிஜன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு 519 டன் என்று அதிகரிக்கப்பட்டு உள்ளதாலும், பிற மாநிலங்களிலிருந்தும் ஆக்சிஜன் வருவதாலும் தற்போது எதும் கவலைப்பட தேவையில்லை” என்று உத்தரவிட்டனர்.

Related Stories: