மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை கடந்த 11ம் தேதி  நடத்தினார். அக்கூட்டத்தில், மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு  பின்வரும் சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது: அதன்படி, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும்  மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்  உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்  இரண்டு ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் வரும்  ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் உற்பத்தியைத் தொடங்கவேண்டும்.  மேலும்,   ஜனவரி 1ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை செய்யப்படும் முதலீடுகளும் இதற்கு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

குறைந்தபட்சம்  நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன்  உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க கடந்த ஜனவரி 1ம் தேதி  முதல் வரும் நவம்பர்  30ம் தேதி வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30 சதவீதம்  மூலதனமானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு நிறுவனங்கள் வரும் நவம்பர் 30ம் தேதிக்கு முன்னர் உற்பத்தியை தொடங்க வேண்டும். அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும். அதேபோல், தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ நிறுவனங்கள் மூலம்   நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி  நிறுவனம் மூலம்  கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து  அனுமதி வழங்கப்படும்.கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும்  புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு  டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணைபுரியும். மேலும், இந்தச் சிறப்பு தொகுப்பு சலுகைகள் தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: