கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கிய போலீசார்

சென்னை: கொளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குன்றம் சாலையில் இயங்கி வரும்  தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதியுள்ளது. இங்கு 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆக்சிஜன் தடுப்பாடு காரணமாக அங்கிருந்த கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற நேற்று முன்தினம் மாலை நோயாளிகளின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால், செய்வதறியாது தவித்த உறவினர்கள் மருத்துவமனை முன்பாக கூடியுள்ளனர். இதுபற்றி அறிந்த கொளத்தூர் காவல் நிலைய நுண்ணறிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, நிலைமை குறித்து  வில்லிவாக்கம் சரக உதவி ஆணையர் ஸ்டீபனுக்கு  தெரிவித்துள்ளனர்.

அவர், மணலி அடுத்த சாத்தாங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார்  ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறி, அங்கிருந்து சுமார் 20 ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். உரிய நேரத்தில் காவல் துறையினரின் இந்த பணி அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

நிவாரண பொருட்கள் வழங்கிய எஸ்ஐ

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வசதி படைத்தவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் காவல்துறை நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் உதவி ஆய்வாளர் மேகபூப் ஜான், அப்பகுதியில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி, முகக்கவசம் மற்றும் மருத்துவ பொருட்களை இலவசமாக வழங்கினார். அவரது இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: