சென்னை: கொரோனா நிவாரண பொருட்களாக கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். பதவியேற்றவுடன் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதவிர, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மாநகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம் என 5 அறிவிப்புகளை வெளியிட்டார். இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி தமிழகத்தில் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 13 வகையான மளிகை பொருட்களை கொரோனா நிவாரண பொருளாக வழங்க தமிழக அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.