சீமானின் தந்தை மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது: செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள்  மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சீமானின் தந்தை செந்தமிழன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், குடுமபத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். திரு.சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் திரு.செந்தமிழன் அவர்களின் மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் அன்புத் தந்தை திரு.செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையுற்றேன். தனது தந்தையை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: