கொரோனா நோயாளி இறந்ததை பார்த்து ஆஸ்பத்திரியில் இருந்து பயந்து ஓடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவனந்தபுரம்: திருச்சூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி மரணமடைந்ததை கண்டு பயந்து ஓடியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (64). கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் பக்கத்து படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரது மரணத்தை நேரில் பார்த்த நாராயணன் கடும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் டியூபை பிடுங்கி எரிந்துவிட்டு பயந்து வெளியே ஓடினார். அப்போது திடீரென அங்கேயே மயங்கி விழுந்தார். டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது அவர் மரணமடைந்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: