அண்ணாநகர்: சென்னை திருமங்கலம், வண்டியம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்டீன் செல்வராஜ் (50). இவர், அதே பகுதியில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஆவடி அருகே மோரை பகுதியை சேர்ந்தவர் பாபு (32). இவர், கடந்த ஆண்டு பாஸ்டீன் செல்வராஜிடம் ரூ50 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவானதாக தெரிகிறது. இதுகுறித்து பாஸ்டீன் செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் பாபு சரணடைந்தார்.
இந்தநிலையில், நேற்று அவரை திருமங்கலம் போலீசார் 5 நாள் கஸ்டடியில் எடுத்து, சென்னைக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில், ரூ50 லட்சம் மோசடியில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.