தாம்பரம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரம்: டிரைவரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் சரண்

தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (36). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 9ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபடி, தனது நண்பரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், கோபாலகிருஷ்ணனை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். கோபாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 மர்ம நபர்களும் நேற்று தாங்களாகவே சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் சேலையூர், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (27), திருவஞ்சேரியைச் சேர்ந்த மார்டின் (22), மப்பேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (19) எனத் தெரியவந்தது. மேலும், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயதான பெண்ணுடன் ராஜசேகருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அப்பெண்ணுடன் கோபாலகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பெண் ராஜசேகருடன் தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதில் ஏற்பட்ட கோபத்தில் கோபாலகிருஷ்ணனை தனது நண்பர்கள் மார்டின், ரஞ்சித்குமாருடன் சேர்ந்து வெட்டி கொல்ல முயன்றதாக ராஜசேகர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: