சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தவணைத் தொகை வழங்க 6 மாத கால அவகாசம்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, கடன் சுமையை குறைக்கும் வகையில் 6 மாத காலத்துக்கு மாதாந்திர தவணைத் தொகையை வழங்க 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி  மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

 தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9ம் தேதி முதல் மு.க.ஸ்டாலின்  தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

அக்கூட்டத்தில், ‘சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும்  மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார்.

அதனடிப்படையில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில், 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்தக் காலத்திற்கு  வட்டி ஏதும் வசூலிக்கப்படக்  கூடாது என்றும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை, ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி  ஆளுநருக்கும் முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: