கிராமப்புறங்களில் வேகமாக பரவுகிறது கொரோனா தொற்று: தடுப்பூசி போடுவதும் கிராமப்புறங்களில் குறைவு

சென்னை: கொரோனா தொற்று தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரு நகரங்களை காட்டிலும் அதில் இருக்கக்கூடிய கிராமப்புற பகுதிகளில் அண்மை நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவாரூர், தருமபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இவை கிராமப்புற மாவட்டங்களாக கருதப்படுகின்றன.

கொரோனா 2வது அலையில் இந்த கிராமப்புற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை 3,158 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

கொரோனா முதல் அலையின் போது அதாவது 2020 மார்ச் முதல் 2021 மார்ச் 1ஆம் தேதி வரையிலான காலத்தில் கண்டறியப்பட்ட மொத்தப் பாதிப்புகளின் எண்ணிக்கை 6,475 என்கிற அளவில் இருந்தது. ஆனால் தற்போது சராசரியாக ஒரு மாதத்தில் மட்டும் 1,300க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

முதல் அலையின் போது இந்த எண்ணிக்கை 540ஆக குறைந்திருந்தது. 2வது அலையில் சென்னையில் ஒருமாத கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் பாதிப்பு விகிதம் கிராமப்புற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதேபோல தடுப்பூசியும் சென்னை, மதுரை போன்ற நகரங்களை ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் குறைவாகவே போடப்படுவதாக தெரிகிறது.

Related Stories: