திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாகம் இருந்தது. இது பழைய கட்டிடமாக இருந்ததால் இதனை அகற்றி உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் ரூ.18 லட்சத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குறிப்பாக பெண்கள் இரவுநேரங்களில் கழிப்பிடம் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் இதுவரை சுகாதார வளாகம் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்கள் நலன் கருதி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.