கடன் பிரச்னையால் சோகம் குழந்தைகளுக்கு விஷம் தந்து கொன்று தம்பதி தற்கொலை-உசிலம்பட்டியில் பரபரப்பு

உசிலம்பட்டி : கடன் பிரச்னையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, ஆர்.கே.தெருவை சேர்ந்தவர் சரவணன்(37). இவர் உசிலம்பட்டி நகைக்கடைத் தெருவில் நகை பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார். மனைவி ஸ்ரீநிதி பூங்கோதை(30). மகள்கள் மகாலட்சுமி(10), அபிராமி(7), மகன் அமுதன்(5). இவரது தொழில் கடந்த கொரோனா ஊரடங்கின்போதே நலிவடைந்தது. இதனால் மிகவும் கஷ்டமான சூழலுக்கு ஆளானார். குழந்தைகளை காப்பாற்ற கடன் வாங்கினார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டனர். போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. குடும்ப செலவிற்கே பணம் இல்லாத நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சரவணன் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சரவணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

டிஎஸ்பி ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வாயில் நுரை தள்ளிய நிலையில் சரவணன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

நேற்று அதிகாலை தனது மனைவி ஸ்ரீநிதி பூங்கோதையை பால் வாங்கி வரச்சொல்லி, அந்த பாலில் நகைகளை பாலீஸ் செய்யும் ஆசிட்டை ஊற்றி கலந்து குழந்தைகள் மகாலட்சுமி, அபிராமி, அமுதன் ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அவர்கள் உயிரிழந்ததும், தம்பதியும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

போலீசார் 5 பேரின் உடலைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடன் பிரச்னையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தம்பதி தற்கொலை செய்து கொண்டது உசிலம்பட்டி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மன்னித்து விடுங்கள் அம்மா’

சரவணன் உடல் அருகில் கிடந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம் அவரது தாயாருக்கு எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில், ‘‘வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. கொரோனாவால் வேலையும் இல்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. எங்களை மன்னித்து விடுங்கள் அம்மா’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: