சென்னை: சென்னையில் நேற்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், வங்கிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் வகையில் சுழல் நிதி மற்றும் கடனுதவிகள் வழங்குவது குறித்து வங்கிகளின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் விளக்கிக் கூறினர். இதையடுத்து, மகளிருக்கான புதிய திட்டங்களை உருவாக்கி வங்கிகள் மூலம் செயல்படுத்த வங்கிகளின் ஒத்துழைப்பு வேண்டும்.வங்கிகளின் ஆய்வுக் கூட்டங்களை மாவட்டந்தோறும் அடிக்கடி நடத்தி மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம் குறித்த செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.