கொரோனா தொற்றால் ஆயுதப்படை எஸ்ஐ பலி

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன்  (57). இவர் சென்னை மாநகர காவல் துறையின் பரங்கிமலை ஆயுதப்படையில்  உதவி ஆய்வாளராக வேலை செய்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு நோய் தொற்று இருந்தது  உறுதியானது.அதைதொடர்ந்து கடந்த சனிக்கிழமை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மதியம் உயிரிழந்தார். பின்னர் சம்பவம் குறித்து உயிரிழந்த  ஆயுதப்படை உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். பின்னர் பரங்கிமலை ஆயுதப்படை அலுவலகத்தில் வைக்கப்பட்ட உயிரிழந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் செல்வன் உருவப்படத்திற்கு உயர்  அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார் மலர் அஞ்சலி செலுத்தினர். கொரோனா தொற்றால் மாநகர காவல் துறையில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 10 போலீசார் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: