சென்னை: திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது, “திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 2500 பேர் மருத்துவமனைகளிலும், 1,140 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், 2164 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 142 இடங்களில் பிராணவாயு உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது. அவை ஒவ்வொன்றும் ரூ.16 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது. ஆவடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் மற்றும் பிராண வாயு உற்பத்தியும் தொடங்கப்பட உள்ளது. பூந்தமல்லியிலும் 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தொடங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் தற்போது ரூ.385 கோடியில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அவற்றிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 64.48 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ரெம்டெசிவிர் மருந்து 936 கையிருப்பு உள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கைகளில் 212 பயன்பாட்டில் உள்ளது. சித்த மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும்’’ என்றார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.