வேலூர்: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் வரும் 24ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் அரங்கேறும் என்பதால், அதை தடுக்க இரும்பு கம்பிகளை கொண்டு வெலங்டிக் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் திருட்டை தடுக்க நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஊரக பகுதிகளில் ஊருக்கு வெளிப்புறமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் அந்த கடைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு வெல்டிங் அமைக்கப்பட்டு வருகிறது. கிரில் கேட் அமைக்கப்படாத கடைகளில் உடனடியாக இந்த இரும்பு கிரில் அமைக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை பாதுகாக்கும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட முடியாது. இதனால் தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களை இரவு நேரங்களில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.