சேலம்: சேலத்தில் கொரோனாவால் தனியார் பள்ளியை மூடுவதாக அறிவித்ததால், பெற்ேறார் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே அத்வைதா ஆசிரமம் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதன்படியே இப்பள்ளியும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். ஒரு கல்வியாண்டு முடிந்தநிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்க, தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம், மாணவ, மாணவிகளின் பெற்றோர் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தங்களால் பள்ளியை நடத்த முடியவில்லை. பள்ளியை மூடுகிறோம்.
அதனால், தங்கள் குழந்தைகளின் டிசியை (மாற்றுச்சான்றிதழ்) வாங்கிச் சென்று வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்,’’ எனக்கூறப்பட்டிருந்தது. அத்துடன் நிலுவையில் உள்ள கல்விக்கட்டணத்தையும் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை படித்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியர்களுக்கு போன் செய்து விவரங்களை கேட்டனர். இந்நிலையில் நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். பள்ளி கேட்டை பூட்டிவிட்டு, காவலாளி மட்டும் இருந்தார். இதனால், யாரிடம் பேசுவது எனத்தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.