புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக சரிவை நோக்கி செல்கிறது. பலி எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை மே மாத நடுவில் இருந்து படிப்படியாக சரியத் தொடங்கும் என நிபுணர்கள் கூறியிருந்தனர். அதன்படி, பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டதைத் தொடர்ந்து, தினசரி பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து சரியத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 3.66 லட்சமாக இருந்த நிலையில் நேற்று 3.29 லட்சமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 942 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2 கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி பாதிப்பு சரிவை நோக்கி இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.