புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று குறித்து பொய்யான பீதியை காங்கிரஸ் பரப்புவதாக பாஜ தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டி இருக்கிறார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய சோனியா காந்தி, ‘‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. அறிவியல்பூர்வமான எச்சரிக்கைகளை மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்ததால் நாடு பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
இந்நிலையில் பாஜ தலைவர் ஜேபி நட்டா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 4 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்த தயக்கத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தொற்று நோய்ககு எதிரான போராட்டம் அறிவியலின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, புது கண்டுபிடிப்புக்களுக்கு ஆதரவு, கொரோனா போர் வீரர்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றினால் இயக்கப்பட்டு வருகின்றது.