ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கொமர்நாக்கில் உள்ள வைலூவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் அந்த பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சரண் அடைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சரண் அடைய விரும்பாத தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் பொதுமக்கள் சிக்கியிருந்தனர். இதனால் வீரர்கள் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையில் இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த இல்யாஸ் அகமது தார், உபேத் ஷபி மற்றும் அக்யூப் அகமத் லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.