திருமலை: நெல்லூரில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வின்ஜாமுரு மண்டலம், சந்திரபாடியாவில் தனியார் எரிசக்தி கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று திடீரென அம்மோனியா விஷ வாயு கசிந்ததால் அதிக அளவு புகை மற்றும் தீ ஏற்பட்டது. இதில், சிக்கிய வின்ஜாமூரைச் சேர்ந்த பி.னு, எஸ்.கே.ஷரீப் சவுட்டா பீமாவரத்தைச் சேர்ந்த திருப்பதய்யா உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் கண்எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், 4 தொழிலாளர்கள் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை பார்த்த அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.