இந்தியன்-2 பட தாமதத்திற்கு நான் பொறுப்பல்ல: இயக்குனர் ஷங்கர் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

சென்னை:  நடிகர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் லைகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனுவில்,  ‘‘பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது. கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தோம்.  படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தினர்.

 தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும். அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு தான் பொறுப்பல்ல. இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது. பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல. வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாராக இருக்கிறோம் என்று கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020 ஜூன்  முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீணடித்தது லைகா நிறுவனம்தான்.

இந்த காலத்தில் தான் சும்மா இருக்க முடியாது. எனவே, லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: