கடையம்: கடையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து முளைவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் ராமநதி அணைப் பாசனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த பிசான சாகுபடியில் நெல் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை தனியாரிடமும், அறுவடை காலங்களில் அமைக்கப்படும் தற்காலிக அரசு கொள்முதல் நிலையங்களிலும் விற்பனை செய்வர்.
கடையம் சந்தையில் அமைக்கப்பட்ட தற்காலிக அரசு கொள்முதல் நிலையத்தில் பல விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் மார்ச் மாதத்தில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் முறையாக கொள்முதல் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன. அரசு அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தால் 50 நாள்களுக்கும் மேல் கொள்முதல் செய்யப்படாமல் நெல் முளை விட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பிற்குள்ளாகி உள்ளனர்.