அச்சப்பட்டு, ஓடி ஒளிந்தவர்கள் மத்தியில் கொரோனா பரிசோதனைக்கு தில்லாக வந்த 115 வயது தாத்தா: நகராட்சி பணியாளர்கள் பாராட்டு

தஞ்சை: கொரோனா பரிசோதனைக்கு அச்சப்பட்டு, ஓடி ஒளிந்தவர்கள் மத்தியில் ஆர்வத்துடன் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 115 வயதான மிட்டாய் தாத்தாவை நகராட்சி பணியாளர்கள் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் 831 பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மேற்பார்வையில், துப்புரவு ஆய்வாளர் மோகனா தலைமையிலான பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர். ஆனால் பலரும் வர மறுத்தும், சிலர் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தும் கொண்டனர். ஆனால், கீழவாசல் ஆடக்காரத் தெருவில் வசிக்கும் மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும் 115 வயதான முகமதுஅபுகாசிர் தாமாக முன்வந்து ேநற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள், தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்த தாத்தாவை வெகுவாக பாராட்டினர்.

தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவில் தனியாக வசித்து வரும் முகமதுஅபுகாசிர், வீட்டில் மிட்டாய் தயார் செய்து தெரு, தெருவாகவும் மற்றும் பள்ளிக்கூடங்கள் முன்பும் விற்பனை செய்து காலத்தை ஓட்டி வருகிறார். இதனால் அவரை மிட்டாய் தாத்தா என்று குழந்தைகள் முதல் அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

Related Stories: