முழு ஊரடங்கு அமல்: வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி

சத்தியமங்கலம்: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் நேற்று முதல் மே 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை, பேருந்து போக்குவரத்து, டாக்ஸி, ஆட்டோ இயக்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாநில எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சோதனைச்சாவடியில் பணியில் உள்ள போலீசார் முழு ஊரடங்கின்போது வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், பால், மருந்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக பண்ணாரி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படுவதோடு பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்படாமல் மூடிக்கிடப்பதால் அப்பகுதியில் பெரும் அமைதி நிலவுகிறது.

Related Stories: