புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப்பில் வசதிகள் விரைவில் நிறுத்தப்படும்: பயனர்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என பயனர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளின் அடிப்படையில் வாட்ஸ்அப் பயனாளர்களின்  தகவல்களை சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம்பெற்றிருந்தன. மே 15ம் தேதிக்குள் புதிய கொள்கையை  ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

பின்னர் பல்வேறு எதிர்ப்புக்குப் பின்னர், மே 15க்குப் பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்கள் கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் விரைவில் நிறுத்தப்படும் என கூறியிருந்தது. இதை நினைவுபடுத்தும்  விதமான வாட்ஸ் அப் தற்போது தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளது.  அதில், ‘புதிய கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும். அதன் பின் சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும். பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்த செய்யப்படும். இதன்படி,  பயனாளர்கள் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.

ஆனால், இன்கம்மிங் வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ கால்களில் பேச முடியும்.  நோட்டிபிகேஷன் எனேபிள் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து,  பதிலளிக்க முடியும், மிஸ்ட் போன் மற்றும் வீடியோ கால்களை அழைத்து பேச முடியும். அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும். இந்த  நினைவூட்டல் ஒரே நேரத்தில் எல்லா பயனாளர்களுக்கு வராது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: